Pages

Monday 18 February 2013

பீட்சா தின்ற கதை

எட்டாயிர ரூபாய் மாத வருமானத்தில் ஒரு பெரு நகரத்தில் மூன்று பேர் கொண்ட குடும்பம் வாழ்வதென்பது சபிக்கப்பட்ட நிதர்சனம். தலைவலித்தால் கூட ஒரு காப்பி குடிக்க யோசிக்க வேண்டும். வாரமொரு முறை என்றிருந்த சினிமா இப்பொழுது எப்போதோ ஏதோ ஒரு மாதத்தில் என்றாகிவிட்டது எனது பொருளாதார  வளர்ச்சி. சந்தையில் இன்ன இன்ன பொருட்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை டிவியில் விளம்பரங்கள் பார்த்து பெருமூச்செறிவதோடு சரி. ஆனால் என் பத்து வயது மகனுக்கு அதெல்லாம் புரியாதே. விளம்பரங்கள் பிரத்யேகமாக குழந்தைகளுக்காகவே தயாராகின்றன போலும். சாக்லேட்டிலிருந்து துணிகள் தங்க வைர விளம்பரங்கள் வரை அவை சிறுவர் சிறுமியரை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. நாம் உற்பத்தி செய்த ஒன்றின் மூலம் அவர்களின்
விற்பனையை பெருக்கும் உத்தியை கண்டுபிடித்தவனை மலைஉச்சியில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும். கீழே பாதாளம் தெரிகிறதா என கேட்க வேண்டும். 

அதென்னவோ என் மகனுக்கு சாக்லேட் கலர்பென்சில் துணி விளம்பரங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. Just Rs.99 என்று அறைகூவும் பீட்சா விளம்பரத்தை பார்த்தால் போதும். அமர்ந்திருப்பவன் இரண்டடி அந்தரத்தில் எகிறி குதிப்பான். "ப்பா இதாம்ப்பா நான் சொல்வேனில்ல இதாம்பா" என்பான். சமையலறையில் இட்லி வேகவைத்துக் கொண்டிருக்கும் அவன் அம்மாவை இழுத்துக் கொண்டு வருவான். அதற்குள் அடுத்த அறைகூவல் தொடங்கியிருக்கும். நீண்ட நாட்களாக பீட்சா  வாங்கித்தர சொல்லி அடம்பிடிக்கிறான். ஒரு வேளைக்கு ஒருவனுக்கு நூறு ரூபாய் என்பது என் சிறிய பட்ஜெட்டில் துண்டல்ல ஒரு பெரிய ஜமுக்காளமே விரிப்பது.

நாளை இவனுக்கு பிறந்தநாள். இந்த முறையாவது இவனது இந்த சின்ன ஆசையை நிறைவேற்ற வேண்டுமென விரும்பினேன்.அந்த வட்ட வடிவை முக்கோணங்களாக வெட்டி யுவ யுவதிகள் சுவைக்கிறார்கள். விளம்பரங்களில் பார்த்ததுதான். பின்பு வாழ்வே ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அவர்ளது முகங்களில் அத்தனை மகிழ்ச்சி. அப்படி குதூகலிக்க என்னதான் அதிலிருக்கிறது? ஒரே ஒரு பீட்சா வாங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு முழு பீட்சாவை இவனால் உண்ண முடியாது. நூறு ரூபாய். பஸ்ஸில் போக வர முப்பது ரூபாயாவது வேண்டும். நூற்றைம்பது ரூபாய் கொண்டு போனால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையே உற்சாகத்தை
கொடுத்தது. 

காலையில் சீக்கிரமே எழுந்து இருந்ததிலேயே புதிதாக தெரிந்த உடைகளை அயர்ன் செய்து குளித்துவிட்டு முந்தாநாள் போட்ட சட்டையையே மீண்டும் அணிந்து கொண்டேன். பயலும் உற்சாகமாக இருந்தான். மனைவி கூட வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சியோடு இருப்பதாகப் பட்டது. அன்று சீக்கிரமே ஆபிஸ் கிளம்பிவிட்டேன். மாலையும் சீக்கிரம் வீடு திரும்பி உடை மாற்றி பயலை பீட்சா கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். "புது டிரஸ் ஸ்கூலுக்கு போட்டு போக வேண்டாம்.அப்பா சாயந்திரம் வந்து ஒன்ன வெளிய கூட்டிட்டு போறப்ப போட்டுக்கலாம் என்ன?" என்றேன். தலையாட்டினான். சமத்துப்பயல். இன்று நிச்சயமாக ஆகாசத்தில் பறக்கப் போகிறான். திட்டம் போட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே  வீடு வந்து முகம் மட்டும் கழுவிக் கொள்ளலாம் என யோசித்து பின்பு அந்த எண்ணத்தை ஒத்திப்போட்டு குளித்து மனைவியிடம் ரகசியமாக கிசுகிசுத்து விட்டு கிளம்பினேன். பேருந்தில் மகனிடம் பீட்சா சாப்பிடப் போறோம் என்றபோது கண்களை அத்தனை பெரிதாக்கி ஆச்சரியப்பட்டதை பார்க்கும் போதே எனக்குப் பெருமையாக இருந்தது. 

"நிஜமாவாப்பா நிஜமாவா எனப் பத்து முறையாவது கேட்டிருப்பான்.
அன்றைக்கு வாழ்க்கையில்  முதல் முறையாக பீட்சா சாப்பிடுவது என முடிவு செய்து அதற்கென்றே பிரத்யேகமான கடைக்குள் நுழைந்து தயங்கி அமர்ந்தோம். சைவத்திலிருந்தே ஆரம்பிப்பதென ஆர்டர் எடுக்கவந்த பெண்மணியிடம் VEG PIZZA என்றேன். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் வாழ்வை உன்னதமாக்கும் பீட்சா வராததால் என்ன செய்வதென்றறியாமல் அந்தப் பெண்மணியை நான் அடிக்கடி திரும்பிப் பார்ப்பதை அவரும் கவனித்துக்கொண்டிருந்தார்.  எட்டாவது முறை பார்த்தபோது  'இன்னும்
அஞ்சு நிமிஷம் சார்' என்றார். நான் அசட்டுத் தனமாக சிரித்துவைத்தேன். பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்ள அலைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பீட்சா அந்த நிறுவனத்தின் பெயர் தாங்கிய அட்டைப்பெட்டியில் பேக் செய்யப்பட்டு என் முன் வைக்கப்பட்டது.அருகே சாஷேக்களில் சாஸும் நான் இன்னதென்று அறியாத இன்னபிற சமாச்சாரங்களும். 

உடனேயே உண்ணப்போகும் எனக்கெதுக்கு பேக் செய்து தருகிறார்கள் எனக் குழம்பிக்கொண்டே கொஞ்சநேரம் அதை எப்படி எங்கிருந்து பிரிப்பது என அறியாது தடுமாறி வெறித்துப் பார்த்து, பை பாஸ் சர்ஜரி செய்யும் போலி டாக்டர் போல தாறுமாறாக அட்டையை நான் கிழிக்க ஆரம்பிக்க, அந்தப் பெண் நிதானமாக என்னருகே நடந்து வந்து ஏதோ புதிய நகைக்கடை ஷோ ரூமை திறந்து  வைத்த மார்க்கெட் இழக்காத நடிகையை போல அட்டையை லாவகமாக நீக்கி பெருமிதம் பொங்க என்னைப் பார்த்தார். மகன் என்னை பரிதாபமாக பார்த்தான்.நான் பீட்சாவைப் பார்த்தேன்.நான்கு துண்டுகளில் ஒன்றை அவனுக்கு அளித்துவிட்டு நானும் ஒன்றை எடுத்து கடித்தேன். வழுவழுவென்று நான் கடித்த பகுதியுடன் நூல் போல ஒட்டிக் கொண்டு பெரிய துண்டும் நீட்டிக் கொண்டிருந்தது.கையின் உதவியுடன் அப்பகுதியை கத்தரிக்கலாம் என்றால் இந்தப் பெண் வேறு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

'ஏங்க நான் வெஜ் தான கேட்டேன்.சீஸ் பீட்சா கொடுத்திருக்கீங்க' என்றேன். அவர் அற்பப் பதரே என்பதுபோல பார்த்து, 'இங்க வெஜ்னாலே சீஸ் பீட்சாதாங்க ' என்றார். ஒரு வழியாக பற்களாலேயே அந்த அபாயத்தை கடந்து நிம்மதிப் பெருமூச்சிடுகையில், 'இந்த சாஸ் மேல ஊத்திக்கங்க.அப்பத்தான் நல்லா இருக்கும்' என்றார். 'ஆமாப்பா  நல்லா இல்ல' என்ற மகனை முறைத்துவிட்டு  சாஸ் ஊற்றிக்கொண்டேன். அதற்குள் அவர் மற்ற சாஷேக்களை சுட்டிக் காட்டி இதையும் பிரிங்க' என்றார். 'இல்லீங்க.அது பிடிக்காது(?)' என்றேன். 'அப்படியா?'. அந்த 'அப்படியா'வில் பலத்த சந்தேகமும் அவநம்பிக்கையும் தெறித்து என் மேல் விழுந்து என்னை சுட்டது. 

மகனின் தட்டைப்  பார்த்தேன்.பாதி கூட சாப்பிட்டிருக்க வில்லை.மீதமிருந்த இரண்டு பகுதிகளையும் முகத்தை அஷ்டகோணலாக்கி உண்டு முடித்தேன். கை கழுவலாமா என யோசித்து பின் நாப்கினால் என கையயையும் அவன் வாயையும் துடைத்துவிட்டேன்.

'இப்பதான் மொத தடவ பீட்சா சாப்பிடுறீங்களா?

'ஆமா'

பில் வந்தது.  பில்லைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை உச்சரிக்கையில் ஏற்படும் துல்லியமான அதிர்ச்சி. வீட்டிலிருந்து இங்கு வருவதற்ரு இருவருக்கும் சேர்த்து பதினான்கு ரூபாய். பீட்சா நூற்றிபத்து ரூபாய் + வாட் வரி என ஏதோவொரு எழவு சமாசாரத்தை போட்டு அதற்கு தனியாக பதினேழு ரூபாய்.ஆக மொத்தம் ஒரு பீட்சா நூற்றி இருபத்தியேழு ரூபாய். ஒன்பது ரூபாய் மிச்சமிருந்தது. அந்தப் பெண் என்னையே பார்த்துக்கொண்டிருக்க ஐந்து ரூபாய் சில்லரையை எறிந்து விட்டு மகனை இழுத்துக்கொண்டு ஏமாற்றமடைந்த உஷ்ணத்தோடு கடையை விட்டு வெளியேறினேன்.நான்கு ரூபாய்க்கு எந்த பேருந்திலும் ஏற்றமாட்டான்.பத்து வயது ஆன ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்  என்றெண்ணும் போதே துக்கம் பொங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு பேருந்து எங்களை கடந்தது. 

"அப்பா இந்த பஸ் நம்ம வீட்டுக்குப் போவுமா?" என்றான். 

"பேசாம வாடா  சனியனே" என்றேன்.